சிதம்பரம் கோவிலில் புது கொடிமரம்.. உள்ளே புகுந்த அறநிலையத்துறை அதிகாரிகள்.. தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கொடி மரத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கொடி மரத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளதால் அதிகாரிகளுக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022 வருடம் பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை வெளியிட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது.

ஆனால் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி ஆய்வு செய்ய முடியும். ஆனாலும் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இது போக சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த 2021 வருடம் தனது மகளுக்கு 13 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.

15 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் இந்த திருமணம் நடந்த நிலையில் இந்த வருடம்தான் அந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது கொடிமரம் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು