10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

மதுரையில் இத்தகைய ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா கரும்பாறை முத்தையா கோயிலில் மட்டும் நடக்காது. திருப்பங்குன்றத்தில் உள்ள உச்சி கருப்பண்ண சாமி கோயிலில் சித்திரை மாதத்தில் முக்கனிகள் படைத்து ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் நிகழ்வும் நடைபெறும்.

மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக பூமியாக விளங்கும் இந்தியாவில் திரும்பும் திசை எங்கும் வழிபாட்டுத் தலங்கள் பல்வேறு மதங்கள் சார்ந்து நிறைந்துள்ளது. இதில் சில வழிபாட்டு தலங்களில் வினோதமான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படும். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி என்னும் கிராமத்தில் கரும்பாறை முத்தையா என்ற கோயில் உள்ளது. காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கு பிறந்த குழந்தை முதல் வயதான பெண்கள் வரை யாரும் அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான பூஜை இன்று நடைப்பெற்றது. இதில் திருமங்கலம் தொடங்கி சோழவந்தான் வரையுள்ள சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து  சமைத்து பரிமாறப்பட்டது. இந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிகையில் அடுத்தாண்டு வழிபாட்டுக்கான ஆடுகளை பக்தர்கள் கோயிலில் விட்டு செல்கிறார்கள்.

கோயிலில் வளரும் இந்த ஆடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் காட்டுப்பகுதிகளுக்குள் சென்றாலும் அவற்றை யாரும் விரட்ட மாட்டார்கள்.  தங்கள் இடங்களுக்கு கரும்பாறை முத்தையா சாமியே வந்ததாக பொதுமக்கள் நெகிழ்கிறார்கள். இன்று காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகளை பலியிட்டு உணவாக சமைப்பார்கள். குறிப்பாக 50 மூட்டை அரிசியில் சாதம் தயாராகும். அதேசமயம் கரும்பறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாது.

அதனால் சமைக்கப்பட்ட உணவுகளை மலைபோல் குவித்து அதன் மேல் கறிக்குழம்பு ஊற்றி படையலானது தயார் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் தயாராக இருந்த அண்டாக்களில் குழம்பில் இருக்கும் கறிகள்  மட்டும் தனியாக எடுத்து மொத்தமாக கட்டி வைக்கப்படும். அவற்றில் இருந்து எலும்புகள் தனியாக பிரித்து எடுத்து அதன் பிறகு கறிகளை அனைவருக்கும் பரிமாறுவார்கள்.

முதலில் இலையில் கறியை வைத்துவிட்டு அதன் பின் சாதம் வைக்கப்பட்டு தொடர்ந்து குழம்பு ஊற்றப்படும். இந்த திருவிழாவில் சாப்பிடும் ஆண்கள் இலையை எடுக்காமல் அப்படியே விட்டு செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து அங்கிருந்து காணாமல் போன பிறகு பெண்கள் இக்கோயிலுக்கு வர அனுமதி அளிக்கப்படுகின்றது. மேலும் இந்த கோயிலில் நேர்த்திக்கடனாக கருப்பு நிற ஆடுகளை மட்டுமே வழங்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು