உயிரிழந்த சிறுமி லியா லட்சுமி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்படுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பழனிவேல் – சிவசங்கரி தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது 3 வயது குழந்தை லியா லட்சுமி அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு பள்ளி சென்று வந்தாள். இதனிடையே நேற்று வழக்கம்போல லியா லட்சுமியை பள்ளியில் விட்டு விட்டு பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். அங்கு மதிய நேரத்தில் வகுப்பறை அருகே அச்சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறு விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்து பதற்றமடைந்த மற்ற குழந்தைகள் உடனடியாக ஆசிரியரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் ஓட்டுநர் உதவியுடன் செப்டிக் டேங்கில் கிடந்த குழந்தையை மீட்டனர். ஆனால் அதற்குள் லியா லட்சுமி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
லியா லட்சுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கதறி அழுதபடி உறவினர்கள் மற்றும் அருகில் வசிக்கும் சுற்றுப்புறத்தாருடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். மேலும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்திடம் கடுமையான வாக்குவாதம் செய்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. லியா லட்சுமி சாவில் நீதிக் கேட்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதேசமயம் பள்ளி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை லியா மதியம் 2 மணிக்கு கழிவறை செல்வதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் 1.50 மணிக்கு பெண் ஒருவர் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் ஒரு மணி நேரம் தாமதமாகவே மருத்துவமனைக்கு குழந்தையை பள்ளி நிர்வாகம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேசமயம் செப்டிக் டேங்கில் விழுந்ததாக சொல்லப்படும் லியா லட்சுமியின் உடல் மற்றும் ஆடை எதுவுமே நனையாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 2 மணி நேரம் கழித்து தான் குழந்தை இறந்த தகவலை பழனிவேல் – சிவசங்கரிக்கு பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை என தமிழக அரசை கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுமி லியா லட்சுமி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சந்தேக மரணம், கவனக்குறைவு ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.