2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு கூட்டணியில் பிரச்னையை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திமுக அரசை விமர்சித்து கருத்துக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அதைக் கண்டித்து கட்டுரை வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கட்டுரையில், “விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய கருத்துக்கள் தோழமைக்கான இலக்கணமாக இல்லை. தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா என்று அவர் பேசிய பேச்சால் திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்திற்கு தீனி போட தொடங்கியுள்ளார். டிசம்பர் 28ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் விழுப்புரம் வியூகம் வகுக்க சங்கமிப்போம் என்ற தலைப்பில் 29 பிரிவுகளாக கே பாலகிருஷ்ணன் தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு போராட்டங்களை பட்டியலிட்டு இருந்தார். இப்படி கூறிவிட்டு பின்னர் அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்று கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பாலகிருஷ்ணன்?. அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்ட போராட்டங்களை தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது உண்மை என்றால் இந்த போராட்டங்களுக்கு அனுமதி அளித்தது எந்த முதலமைச்சர்? அவசரநிலை காலத்தில் ஒரு கட்சி இத்தனை போராட்டங்களை நடத்தி இருக்க முடியுமா?
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையப்படுத்தி தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ட்ரெண்ட்டை சிலர் உருவாக்க துடிக்கிறார்கள். அதற்காக போராட்டம் என்ற பெயரில் குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து பாலகிருஷ்ணன் எதற்காக வக்கீலாக மாறுகிறார்? அதன் அவசியம் என்ன?. எதிரி கட்சியாக நடந்து கொண்டு எடுத்தறிந்து பேசினால் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுக்களும் ஊடகத்தின் மூலமாக ஏற்படுத்தும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர் கருத்து சொல்லிக் கொண்டு போவது தோழமைக்காண இலக்கணம் அல்ல.
தோழமையே சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் பாலகிருஷ்ணன் உணராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் அவர் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் பேசியது என்ன?
விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்து பேசினார். அதாவது, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனை கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். சீப்பை மறைத்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என நினைக்க வேண்டாம். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டீர்களா?.
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் ஏன் செயல்படுகிறது? அதேசமயம் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். மேலும் திமுகவுடன் நாங்கள் கூட்டணி ஆட்சியில் இல்லை. அதனால் அவர்கள் எடுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.