சென்னை: நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அவருடைய கழுத்தில் ஏதோ மார்க் இருக்கிறதே என ரசிகர்கள் கவனிக்க தொடங்கிவிட்டனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டு திரைக்கு வர இருந்தது. ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது.
இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இதில் விஷால், வரலட்சுமி, சந்தானம், அஞ்சலி போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் நேற்று நடந்தது. இதில் சுந்தர் சி, விஜய் ஆண்டனி, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஷால் பேசிய போது அவருடைய கைகள் நடுங்கின. அவரால் சில வார்த்தைகள் கூட மைக்கில் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது.
இதை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்னதான் ஆச்சு என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் விஷாலை பத்திரமாக பிடித்து அங்கிருந்த நாற்காலியில் விஜய் ஆண்டனி உட்கார வைத்தார். அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.