திருநெல்வேலி: தமிழக வரலாற்று பெருமைக்கு அடையாளம் நெல்லை மண் தான் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருநெல்வேலி இன்று (பிப்.,07) நடந்த அரசு விழாவில் ரூ.1060.76 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம், ரெட்டியார்பட்டியில் ரூ.85.63 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 768 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர், ரூ 77.02 கோடியில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள மெகா உணவு பூங்கா திட்டம் உள்ளிட்ட ரூ. 309.05 மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 75,151 பேருக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வெள்ளி தேர்
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எந்த ஆட்சியாக இருந்தாலும் மிக முக்கியமான நகரமாக நெல்லை இருந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில் தான் நெல்லையப்பர் கோவிலின் தெற்கு, வடக்கு வாசல் திறக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும்.
நெல்லை மண்
திருநெல்வேலியில் ஈரடுக்கு பாலம் கட்டியது தி.மு.க., ஆட்சியில் தான். தமிழக வரலாற்று பெருமைக்கு அடையாளம் நெல்லை மண் தான். ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை கண்காட்சி அமைக்கப்படும்.பாண்டியர், சோழர், ஆங்கிலேயர் காலத்திலும் நெல்லை சிறப்பான நகரமாக நெல்லை விளங்கியது. பொருநை ஆற்றின் கரையில் 3,700 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டு உள்ளது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
அல்வா தான் பிரபலம்
மத்திய அரசு நிதி தராதது நயினார் நாகேந்திரனுக்கு தெரியும். அவர் பேச மாட்டார். தமிழகத்தை மீண்டும், மீண்டும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இதுவரை திருநெல்வேலி அல்வா தான் பிரபலம், தற்போது மத்திய அரசு தரும் அல்வா பிரபலமாக உள்ளது. ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவதூறு பேசுவோருக்கு பதிலுக்கு பதில் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. விஷக்கிருமியின் அக்கப்போர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.