AIADMK Unity: திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர்கள் வறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, மார்ச் 19: தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கு ஒரு காலத்தில் சரியான போட்டியாளராக அதிமுக (AIADMK) இருந்தது. ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அதிமுக 3 முதல் 4 பிரிவுகளாக பிரிந்தது. இரட்டை இலை தற்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் (Edappadi K. Palaniswami) இருப்பதால், அவரது தலைமையின் கீழும், அதிமுக நிர்வாகிகளின் கீழும் அதிமுக இயங்கி வருகிறது. இருப்பினும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய கருத்திற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விருப்பம் காட்டவில்லை. இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியை திருத்த பாருங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் டிடிவி தினகரன்..?
சென்னையை அடுத்த அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கூட்டணிக்கு வருவோம் என்று சொல்லவில்லை, வர வேண்டும். அதிமுக மீண்டும் ஒன்றாக இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது அம்மாவின் கொள்கையில் ஆட்சி நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டியது. மேலும், அதனால்தான் அதிமுகவில் இருந்து அமமுக கட்சி தனித்து தொடங்கப்பட்டது. ஆனால், அவர்களிடம் இரட்டை இலை இருந்த காரணத்திற்காகவும், பழனிசாமி ஆட்சி பொறுப்பில் இருந்த காரணத்திற்காகவும் கட்சியில் இருந்தவர்கள் உண்மை நிலையை உணர்ந்துள்ளார்கள். இதனால், அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமியால் பலவீனப்பட்டு வருகிறது.
திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்படி இல்லையென்றால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர்கள் வறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது நாங்கள் எல்லாம் வந்து உங்களுக்கு கைகொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எடப்பாடி பழனிசாமியை திருத்த பாருங்கள். கட்சியில் இருப்பவர்கள்தான் சரியான முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் இதுதான் என் செய்தி” என்று தெரிவித்திருந்தார்.
அதிமுக 4 பிரிவுகள்:
முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக ஒன்றாக இருந்தது. அவரது மறைக்குவுக்கு பின், முதல் ஆளாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேறினார். அதன்பின், சசிகலா தன் வசம் இருந்த அதிமுக, அவர் சிறை சென்ற காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்றது. இந்த நேரத்தில்தான் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கினர். மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பிரிந்தார்.