CM MK Stalin on Delimitation | தொகுதி மறு சீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் முன்னெடுப்பு குறித்தும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அவசியத்தையும் அவர் கூறியுள்ளார்.
சென்னை, மார்ச் 21 : சென்னையில் நாளை (மார்ச் 22, 2025) நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தொகுதி மறு சீரமைப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் முதலமைச்சர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்
தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்பு தான் தற்போது பேசுபொருளாக உள்ளது. 2026-ல் கண்டிப்பாக தொகுதி மறு சீரமைப்பு நடைபெறும். அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றால், நம் மாநிலத்தின் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும், இதை உணர்த்துவதற்காக தான் திமுக முதலில் குரல் எழுப்பியது என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ
தொடர்ந்து பேசியுள்ள முதலமைச்சர், இது எம்.பி.க்கள் சார்ந்த பிரச்சனை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனால் தான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. பாஜக தவிர மற்ற அனைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறு சீரமைப்பு வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த கூட்டம் எதற்காக நடத்தப்பட வேண்டும் என சிலர் கேட்கிறார்கள். தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது என்றும் ஜனநாயத்திற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும், நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இது குறிப்பிட்ட மாநிலங்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.